Monday, August 15, 2016

சித்தர்கள் சித்தரிக்கும் போலிக்குருமார்



பாம்பாட்டிச்சித்தர் கூறும் போலிக்குரு

பொய்ம் மதங்கள்
போதனை செய்
பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி
நன்னெறியில்
போக விடுக்கும்
மெய்ம் மதந்தான்
இன்னதென்று
மேவ விளம்பும்
மெய்க் குருவின்
பதம் போற்றி
ஆடுபாம்பே!


கண்டவர்கள் ஒருக்காலும்
விண்டி டார்களே :
விண்டவர்கள் ஒருக்காலும்
கண்டி டார்களே !
கொண்ட கோலம் உள்ளவர்கள்
கோன் நிலை காணார் ;
கூத்தாடிக்கூத் தாடியே
நீ ஆடு பாம்பே !
-ஆசான் #பாம்பாட்டிச்சித்தர்

காகபுசண்டர் கூறும் போலிக்குரு

பாரப்பா சீடர்களை
அழைப்பான் பாவி
பணம்பறிக்க வுபதேசம்
பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை
காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு
மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப்
பாவ மாச்சு
நிட்டை சொல்லுங்
குருக்களுக்குத்
தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற
இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று
விளம்பு வானே ! 
-ஆசான் #காகபுசண்டர்

காகபுசண்டர் கூறும் போலிக்குரு

புகலுவார் வேதமெல்லாம்
வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள்
மிகவுங் கற்றே
அகலுவார் பெண்ணாசை
விட்டோ மென்றே
அறிவுகெட்டே ஊர்தோறுஞ்
சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல்
வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந்
தன்னைச் சாற்றி
இகலுமான மடங்காமல்
நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை
பூசை தானே.

பூசையது செய்வமென்று
கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின்
போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப்
பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின்
பயனைக் காணார் :
ஆசையிலே பெண்ணாசை
மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப்
பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய்
நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்ப
பேசு வானே.


பேச்சென்றால்
வாய்ச்சமர்த்தாய்
பேசிப் பேசிப்
பின்னுமுன்னும்
பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும்
ஏதுங் காணார்
நிர்மூட ரனேகவித
சாலங் கற்றே
ஆச்சென்றா லதனாலே
வருவ தேது..?!
ஆத்தாளைப்
பூசித்தோ னவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா
நரகிற் றள்ளும் :
மோசமது போகாதே
முக்கால் பாரே !
-ஆசான் #கருவூர்ச்சித்தர்

சிவவாக்கியர் கூறும் போலிக்குரு

யோகசாடை காட்டுவார்
உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து
வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின்
மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல்
பேருலகில் சாவரே.

ஞானிஞானி என்றுரைத்த
நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற
வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின்
தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி
முன்னிறந்த தென்பரே

காயகாயம் உண்பதாகக்
கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு
மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து
நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி
நாட்டினில் அலைவரே.

நீரினில் குமிழிஒத்த
நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து
ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான
சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை
நீளவும்கைப் பற்றுவார்

காவியும் சடைமுடி
கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக
தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத்
தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம்
பருக்கைகேட்டு அலைவரே

முத்திசேரச் சித்திஇங்கு
முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும்
சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க
நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப்
பாழ்நரகில் வீழ்வரே

மனவுறுதி தானிலாத
மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச்
சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும்
சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும்
இன்பம் அற்ற பாவிகள்
-ஆசான் #சிவவாக்கியர்

திருமூலர் கூறும் போலிக்குரு

குருடர்க்குக் கோல்காட்டிச்
செல்லும் குருடர்
முரணும் பழங்குழி
வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள்
முன்பின் அறவே
குருடரும் வீழ்வார்
குருடரோடு ஆகியே

ஆடம் பரங்கொண்
டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு
வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும்
அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர்
சிவனவன் தாள்களே

ஞானமில் லேர்வேடம்
பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய்
திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும்
வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங்
கழிப்பித்தல் இன்பமே

பொய்த்தவஞ் செய்வார்
புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர்
புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம் மெய்த்தவம்
போகத்துட்போக்கிய
சத்திய ஞானத்தால்
தங்குந் தவங்களே

பொய்வேடம் பூண்பர்
போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு
பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம்
போலவே பூணினும்
உய்வேட மாகும்
உணர்ந்தறிந் தோர்க்கே

குருட்டினை நீக்குங்
குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக்
குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங்
குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங்
குழிவிழு மாறே

மனத்தில் எழுந்ததோர்
மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின்
நிழலையுங் காணார்
வினைப்பயன் போக
விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப்
போகின்ற வாறே
-ஆசான் #திருமூலர்

கொங்கணச்சித்தர் கூறும் போலிக்குரு

பூணராய்ப் பூண்பார்கள்
மூலத்துள்ளே
பெண்ணாசை பொன்னாசை
மண்ணினாசை
ஆணராய்க் காமியத்தைச்
சுழன்று நின்றே
யாச்சரியம் வேதாந்த
மனைத்தும் பார்ப்பார்
காணராய்க் கண்டுவிட்டோம்
ஞானமென்பார்
கழுதைகள்தான் மெத்தவுண்டு
கண்டு கொள்ளே.
-ஆசான் #கொங்கணச்சித்தர்

அகத்தீசர் கூறும் போலிக்குரு

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்க ளப்பனே அனேகங் கூடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
பாழ்த்த பிணங் கிடக்கு தென்பார் உயிர்போச் சென்பார்
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
ஆகாய சிவத்துடனே சேரும் மென்பார்
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
கருவரியா மானிடர்கள் கூட்ட மப்பா
சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச் சேர்ந்து
தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
மனிதனுக் கோ அவ்வளவுந் தெரியா தப்பா
நாடுமெத்த நரகமென்பார்: சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்
ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோனார்
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
தளமான தீயில் விழத் தயங்கி னாரே
-ஆசான் #அகத்தீசர்

சட்டைமுனியார் கூறும் போலிக்குரு

உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே

மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்
மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?
கூறான விந்துவிடக் கோப மோகங்
குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே
-ஆசான் #சட்டைமுனி

பதஞ்சலியார் கூறும் போலிக்குரு

கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே

கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேன் தொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச் நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே

தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான் யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே
--ஆசான் #பதஞ்சலியார்

சித்தர் அறிவியல் 




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment