Thursday, July 26, 2018

சமாதி

சமாதி என்றால் என்ன..?!

மனிதன் ஆதியுடன் இரண்டறக்கலந்து சமாதியாக வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது. சரியை என்பது நெறியுடன் வாழ்வதாகும். கடவுள் வழிபாடே கிரியை ஆகும். யோகம் என்பது மூச்சுக்காற்றைப்பற்றி அறிந்து மூச்சுக்காற்றை ஆசான் ஆசியோடு புருவ மத்தியில் ஒடுக்குவதே யோகமாகும். ஞானம் என்பது எல்லாம் வல்ல பரம்பொருள் உள்ளும் புறமுமாக இருப்பதை அறிந்து உள்ளெழும் ஜோதியை கண்டு தரிசிப்பதே ஞானமாகும்.

சமம் + ஆதி = சம + ஆதி = சமாதி என்று மருவி வரலாயிற்று. அதாவது நாம் ஆதியில் இருந்த நிலைக்குப் போவது. ஆதியில் நாம் இருந்த இடம் நம் தாயின் கருவறை அங்கு நாம் மூச்சுக் காற்றை சுவாசிக்க வில்லை. காற்றை சுவாசிக்காவிட்டாலும் நம் அவயவங்கள் இயங்கின, நாம் வெளிவிடும் மூச்சுக் காற்று பன்னிரு மற்றும் எட்டு அங்குலத்தில் இருந்து சுருக்கிக் கொண்டே வந்து முக்கின் வழி மூச்சுக்காற்றை ஒரு அங்குலத்துக்குள் ஓடுமாறு செய்ய வேண்டும். பின்பு சுழிமுனையில் ஒடுங்குமாறு செய்ய வேண்டும்.

"உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்"
-ஆசான் சிவவாக்கியர்

இடது, வலது மூச்சுத் (மூக்கு) துவாரங்கள் ஊடாக ஓடும் காற்றை(வாயுவை) கபாலத்திலுள்ள சுழிமுனையில் (உருத்தரித்த நாடி) ஓடுங்கினால், வயோதிபரும்(விருத்தர்) பாலகராக மாறி, மேனியும் பளபளப்பாக ஒளிதேகம் பெற்று சிவந்திடும்.

வயது முதிர்ந்த கிழவரும் ஞானபண்டிதனான முருகப்பெருமான் துணைகொண்டு சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை சுழிமுனையாகிய 'உருத்தரித்த நாடி'யில் ரேசித்துப் பூரித்துக் கும்பித்து நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என்கிறார் ஆசான் சிவவாக்கியர். இவ்வாறு நம் உடலாகிய ஆலயத்தைப் பற்றி சித்தர்கள் கண்ட பல உண்மைகள் இன்னும் ஆராயப்படாமல் காத்துக் கிடக்கின்றன.

சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும்.

கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும். ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவார். கடவுளை எந்த உருவத்தில் வணங்கினாலும் கடவுள் மனமிரங்கி அருள் செய்வார்.



எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம்
அன்றேயிரங்கி யீந்தருளும் பதம்.
என்போன்ற வாக்குமிகு பொன்போன்ற
கருணைதந்து இதயத்திருக்கும் பதம்.

மகான் இராமலிங்க சுவாமிகள் அருளிய - அருட்பா - திருவடிப்புகழ்ச்சி.

ஆகவே கடவுள் அருள்பெற வழிபாடு செய்வதே கிரியை மார்க்கமாகும்.

யோகம் என்பது தன் உடல் கூற்றை அறிந்து அதற்குள் இயங்கும் ஆன்மாவை அறிந்து அந்த ஆன்மா இயக்கத்திற்கு மூச்சுக்காற்றுதான் காரணம் என்று அறிந்து அந்த மூச்சுக்காற்றும் நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசமாக(போகின்ற காற்று மற்றும் வருகின்ற காற்று) ஆக 21,600 முறை இயங்கினால்தான் ஆன்மா இயக்கமும் மனித வாழ்க்கையும் நடைபெறும். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றேயாகும். ஆகவே, மூச்சுக்காற்றை அறிந்து அந்த காற்றின் இயக்கமாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகும். இடகலை என்பது இடது மூக்கில் வருகின்ற காற்றும், பிங்கலை என்பது வலது மூக்கில் வருகின்ற காற்றும், சுழிமுனை என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றும் ஆகும். இதை நன்கு அறிந்து ரேசக, பூரக, கும்பகம் ஆகிய தன்மையை உணர்ந்து காற்றை இழுத்தல், ஸ்தம்பித்தல், நிறுத்தல் ஆகிய ரகசியத்தை(காற்றை நிறுத்துதல் என்பது புருவ மத்தியாகிய சுழிமுனையில் காற்றை ஒடுக்குதல்) அறிவதே யோக மார்க்கமாகும். இது அனைத்தும் ஆசான் அகத்தீசன் அருள் இல்லாமல் யோகத்தை அறிந்துகொள்ள முடியாது.



ஞானம் என்பது இயற்கையின் இயல்பறிந்து அது உடம்பினுள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை அறிந்து, அந்த இயற்கை தூலதேகமாகிய புற உடம்பாகவும், சூட்சும தேகமாகிய அகஉடம்பாகவும் இருக்கின்ற இந்த இயல்பை அறிந்து அதே இயற்கை மும்மலமாகிய காமதேகமாகவும், மலமற்ற ஞானதேகமாகவும் அமைந்துள்ளது. இயற்கையின் இயல்பறிந்து அதனுடைய இயல்பாகிய (மாசு அல்லது களிம்பு) களிம்பு அற்றால் சதகோடி (100 கோடி) சூரியப்பிரகாசமான ஒளி உள்ளே தோற்றும். அப்போது அந்த மூச்சானது தானாகவே சென்று சுழிமுனையில் அடங்கிவிடும். ஆனால், நம் உள் அவயவங்கள் எப்போதும் போல் இயங்கிக் கொண்டு இருக்கும். இந்த நிலையை சமாதி நிலை என்பர். இதை அறிவதே ஞானமாகும். அந்த ஜோதியை காணவேண்டும் என்றால் ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருள்செய்ய வேண்டும்.

ஞானத்தலைவன் முருகப்பெருமானே 9 கோடி ஞானியர்க்கும் ஞானம் அதாவது மரணமில்லா பெருவாழ்வு அளித்தவர். முருகப்பெருமானையும் அவர்வழி வந்த முற்றுப்பெற்ற சித்தபெருமக்களையும் போற்றி, அவர்கள் அளித்த உபதேசங்களைக் கடைப்பிடித்தால் பெறுதற்கரிய மானிடப்பிறப்பைப் பெற்றவர் பிறவிப்பிணியை வென்று மரணமிலாப் பெருவாழ்வு பெற்று இறையுடன் இரண்டறக் கலந்து இறைபதமடையலாம்.

களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே

திருமந்திரம் உபதேசம் - கவி 114.

ஆகவே, சரியை, கிரியை, யோக, ஞானமாகிய நான்கும் ஆசான் அருள்கொண்டுதான் அறிய முடியும்.
மேற்கண்ட சரியை, கிரியை, யோக ஞானத்தின் சாரம்.


No comments:

Post a Comment