Tuesday, June 27, 2017

தன்னை அறிகின்றவன் முருகனை அறிவான்.

சித்தர்கள் The Ascended Masters

"தன்னை அறி"

தன்னை அறிகின்றவன் ஞானத்தலைவனாகிய முருகனை அறிவான். உடம்பைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவதே தன்னை அறிவதாகும். அதுவே ஞானமாகும். உடம்பையும், உயிரையும் பற்றி அறிந்து கொண்டவர்கள் இயற்கை அன்னையைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள்.

தன்னை அறியக்கூடிய அறிவு பெற்றாலும், உலகநடையில் இருந்து கொண்டே விடுபடாமல் ஆசான் முருகப்பெருமானை தினமும் காலை மாலை பூசை செய்தும், தவத்திற்குரிய முறையை கடைப்பிடித்தும், மற்றும் உடம்பை பாதுகாக்க கூடிய மூலிகை கற்பங்களையும் ஆசானைக் கேட்டு உண்டு, அத்துடன் ஆசானின் அனுமதியுடன் அவ்வப்போது பிரணாயாமமாகிய யோகம் செய்யவேண்டும். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தன்னடக்கத்தோடு இருந்து குரு அருள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குரு அருள் இன்றி ஒருவன் தன்னை அறியமுடியாது. குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும். குருபக்தி தான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும். ஆகவே குருபக்தி தான் தன்னை அறியக்கூடிய தகைமையைத் தரும்.

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே."


"என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
என்னையிட் டென்னை உசாவுகின் றேனே."


"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே"

-திருமந்திரம்

- ஓங்காரக்குடிலாசான்
அடிகளார் ஆறுமுகஅரங்கர்
ஓங்காரக்குடில் Ongarakudil

No comments:

Post a Comment