Friday, March 6, 2020

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

அருள்வாக்கு 100% பலிதமாகுமா..?!

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு வாழ்த்துகளும், வாக்குகளும் மகான்களின் மூலம் வரும்பொழுது அது அப்படியே 100 –க்கு 100 பலிதமாக வேண்டுமென்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். மெய்தான். அப்படியே நடந்தால் எமக்கும் மனமகிழ்வே.

ஆயினும் பாவகர்மங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறுவிதமான குழப்பங்களையும், எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விதவிதமான சிந்தனைகளைத் தந்து அவனவன் நிம்மதியை கெடுப்பதோடு அவனை சார்ந்தோரின் நிம்மதியையும், சார்ந்தோரின் பாவ கர்மாவை பொருத்து கெடுத்து விடுகிறது.

எனவே சுற்றி, சுற்றி, சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்களை விதியின் வாயிலாக பிறவியெடுத்து, பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆகவேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது.

ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும், கடுகளவு துவேஷம் இல்லாத மனமும், அகங்காரமில்லாத மனமும், சிந்தனையில் சாத்வீகமும், அந்த சாத்வீகத்தில் உறுதியும், செயலிலும், வாக்கிலும், எண்ணத்திலும் நேர்மையும், பிறர் செய்கின்ற அபவாதங்களையும், துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு அப்படி துன்பங்கள் எப்பொழுதெல்லாம் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நிந்திக்காமல், அவர்களை தரக்குறைவாக பேசாமல், ‘ இந்த மனிதன் துன்பத்தைத் தருவதுபோல் தோன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது ‘ என்று எடுத்துக்கொண்டு சமாதானம் அடைவதும், ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும், ஏளனமாகவும், அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும்பொழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே ‘சித்தர்கள் வழி, சித்தர்கள் வழி‘ என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே ? அந்த வழியில் பிரதான வழியாகும். ‘சித்தர்களை வணங்குவேன், ஸ்தலயாத்திரைகளும் செய்வேன், மந்திரங்களை உருவேற்றுவேன்.

ஆனால் பெருந்தன்மையோ, பொறுமையோ இல்லாது நடந்துகொள்வேன் ‘ என்றால் பலனேதுமில்லை. எனவே தளராத பக்தி, தடைபடாத தர்மம், உறுதியான சத்தியம், பெருந்தன்மை – இதுபோன்ற குணங்களை வளர்த்துக்கொண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும், தாக்கினாலும் அதனைத் தாங்கிக்கொள்ளக்கூடிய ஒரு மனோபாவமும் ஏற்படும். பாவத்தின் தண்டனையாக தீய எண்ணங்கள் தோன்றாமலிருக்க வரம் தர வேண்டும்!

தீயது என்று தெரிந்தும் மனிதன் ஒன்றை செய்கிறான் என்றால் என்ன பொருள்?. ஒன்று உடனடியாக அதனால் லாபம் கிடைப்பதால். அடுத்தது உடனடியாக சுகம் கிடைப்பதால். இது யாருக்கு தெரியப்போகிறது? யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?. அல்லது யார் யோக்யன்? என்னை விட அதிக பாவம் செய்பவர் நன்றாகத்தானே இருக்கிறார்?. என்றெல்லாம் தன்னை சமாதானம் செய்து கொண்டுதான் ஒரு மனிதன் தீயது என்று தெரிந்தும் ஒன்றைத் தொடர்கிறான். எப்பொழுதும் இறைவன் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு உறுதியாக வந்துவிட்டால், அவன் தீயதை எண்ண மாட்டான், பார்க்க மாட்டான், பேச மாட்டான், செய்ய மாட்டான். தீ அது சுடும் என்பதால் அதைத் தீண்டவும் மாட்டான்.
-"சித்தன் அருள்"!

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

No comments:

Post a Comment